Font Help?

Martes, Mayo 02, 2006

9. இரு செவ்விகளும், இளிக்கும் நடுநிலையும்

இரு வாரங்களாய் குமுதத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் செவ்வி வந்தது. இந்த வாரத்திலிருந்து கலைஞரின் செவ்வி வர ஆரம்பித்துள்ளது. உண்மையில் இவ்விரு செவ்விகளில் தலைவர்களின் பதிலைவிட குமுதத்தின் கேள்விகள் அதன் நடுநிலைக்கு உதாரணமாக உள்ளது. பதில்களைவிட கேள்விகளிளேயே அதிக சுவாரசியம் உள்ளதால் கேள்விகள் மட்டும் இங்கே.

முதல்வர் ஜெயலலிதாவின் செவ்வி
1: புதியவர்கள், இளைஞர்களை, வேட்பாளர்களாகக் களத்தில் இறக்கியுள்ளீர்கள். இதன் பின்னணி என்ன?
2: தங்கள் நீண்ட நெடிய தேர்தல் சுற்றுப் பயணம் எப்படி சாத்தியமாகிறது?
3: இந்த தேர்தலில் உங்களின் முழக்கம் என்ன?
4: தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம், பிடிக்காத விஷயம் என்று கேட்டால், எதைச் சொல்வீர்கள்?
5: அசத்திய முதல்வர் என்று உங்களைப் பத்திரிகைகள் பாராட்டுவதைக்கூட, அ_சத்திய முதல்வர் என்பதாகத் திரிக்கிறதே முரசொலி?
6: நீங்கள் மறக்க விரும்பும் விஷயம் எது?
7: சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள்? நீங்கள் விரும்பிப் படித்த புத்தகங்கள் எவை?
8: ஆன்மிகம் கொஞ்ச நாட்களாய் நம் நாட்டில் ரொம்ப வேகமாக வளர்ந்து வருகிறதே?
9: நீங்கள் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர் அல்லவா?
10: ‘சிங்காரச் சென்னை’ என்பதை, சாலையோர பூங்காக்கள் மூலம் நீங்கள்தான் செய்து காட்டியுள்ளீர்கள். பூங்காக்களை அமைக்க விரும்பியது ஏன்?
11: சென்னையின் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்த்த ஒரே முதல்வர் என்று சென்னை மக்கள் போற்றுவதாகப் பேசப்படுகிறதே.?
12 : மழைநீர் வீணாகிறதே? அதை முழுவதுமாகச் சேமிக்க வேறு ஏற்பாடுகளே இல்லையா?
13: என்ன செய்தால் தமிழகம் மேலும் முன்னேறும் என்று கருதுகிறீர்கள்?
14 : இந்தியா சுதந்திரம் அடைந்த அறுபதாவது வருடத்தில் அதாவது 2007_ல் ஒரு தமிழன் பிரதமராக வரவேண்டும் என்று விரும்பினார், எடிட்டர் எஸ்.ஏ.பி. அவர்கள். பிரதமர் பதவி என்கிற கனவு உங்களுக்கு இருக்கிறதா?
15: புதுவாழ்வுத் திட்டம் எந்த இலக்கை நோக்கிச் செல்லப் போகிறது?
16: எம்.ஜி.ஆர். என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது?
17: பச்சை நிறம் உங்களுக்கு மிகவும் பிடித்தது. அதற்கு ஏதாவது காரணம் உண்டா?
18: சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் பலர்அ.தி.மு.க.வின் வெற்றிக்குப் பாடுபடப் போவதாகத் தகவல்கள் வருகின்றன. ரஜினி பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?
19: கூட்டணி ஆட்சிக்குத் தயார் என்கிறாரே தி.மு.க. தலைவர் கருணாநிதி?
20: மு.க. ஸ்டாலினுக்காக ‘கொல்லைப்புற முதல்வர்’ திட்டத்தை தி.மு.க. வைத்துள்ளதாக குற்றம் சாட்டுகிறது, விடுதலைச் சிறுத்தைகள். உங்கள் கருத்து?
21: நீங்கள் கேபிள் டி.வி. மசோதா கொண்டு வந்த காரணம் என்ன?
22: சோனியாகாந்தி ராஜினாமா விவகாரம் குறித்து?
23: உங்களுக்குப் பிடித்த பொன்மொழி என்றால் எதைச் சொல்வீர்கள்?
24: நீங்கள் விரும்பிக் கேட்கும் பாடல் எது? ஏன்?
25: சாதாரண குடும்பத்தைச் சமாளிக்கவே பெண்கள் சிரமப்படும்போது ஒரு நாட்டையே சுமப்பது கடினமாக இல்லையா? இதை ஒரு சுமை என்று நீங்கள் எப்போதாவது கருதியது உண்டா?
26: சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவைத் தங்கள் அரசு மிகத் திறமையாகச் சமாளித்தது என சர்வதேச அளவில் பாராட்டு கிடைத்தது. இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்கத் தொலைநோக்குத் திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
27: தமிழக மக்களுக்கு மேலும் நீங்கள் செய்ய விரும்பும் பணிகள், திட்டங்கள் யாவை?
28: தகவல் தொழில்நுட்பம், தொழில் துறை ஆகியவற்றில் தமிழகத்தின் இலக்கு என்ன?
29: born with a silver spoon என்று சொல்வது போல, செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் நீங்கள். அப்படி இருந்தும் அடித்தட்டு மக்களின் உணர்வுகளை முழுக்கப் புரிந்து கொண்ட முதல்வராக இருக்கிறீர்கள். ஏழை மக்களின் பிரச்னைகளை உணர்ந்து அவர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது எங்ஙனம்?
30: பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் இருந்ததைவிட, தற்போது அரசு மீது மக்களுக்கு நல்லெண்ணம் அதிகரித்துள்ளதாகப் பேசப்படுகிறதே? கூட்டணிக் கட்சிகளின் பின்னணியில், மக்களின் நல்ல எண்ணம் ஆட்சியைப் பிடிக்கும் அளவு போதுமானதா?
31: குமுதம் இதழில் ‘நெஞ்சிலே ஒரு கனல்’ என்று அருமையான தொடர்கதை கூட எழுதியிருக்கிறீர்கள். குமுதம் பற்றியும், அதன் வாசகர்கள் பற்றியும் சில வார்த்தைகள் ப்ளீஸ்?

கலைஞரின் செவ்வி

1: நீங்கள் முதல்வரானால் அமல்படுத்தப் போகும் முதல் மூன்று திட்டங்களைச் சொல்லுங்கள்?
2: இலவச கலர் டி.வி. திட்டம் உங்கள் மனதில் உதித்தது எப்படி?
3: 1996 தேர்தலில் ஜெயலலிதா அரசின் ஊழல்கள் பற்றியும், வளர்ப்பு மகன் திருமணம் பற்றியும் பேசி வாக்குகளைக் கவர்ந்தீர்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொடாவையும், அரசு ஊழியர் பிரச்சினையையும் முன் வைத்துப் பிரச்சாரம் செய்தீர்கள். அது போன்ற ஒரு வலுவான பிரச்சினை இப்போது இல்லாமல் போய்விட்டதுதானே?
4: அ.தி.மு.க. அரசைப் பற்றி மக்களிடம் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாத நிலையில், உங்கள் பிரச்சார வியூகம் எப்படியிருக்கும்?
5: இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகத் தொகுதிகளைக் கொடுத்துவிட்டு குறைந்த தொகுதிகளில் மட்டும் தி.மு.க. போட்டியிடுவது, தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளதா?
6: விஜயகாந்தின் வரவு, உங்கள் கட்சியின் வாய்ப்புகளை எந்த அளவு பாதிக்கிறது?
7: கருத்துக் கணிப்புகளின் படி பார்த்தால் தி.மு.க.வின் ஓட்டுக்களைத்தான் விஜயகாந்த் கட்சி பிரிப்பது போல் இருக்கிறது. தி.மு.க.வினர் விஜயகாந்த் பக்கம் சாய்கிறார்களா?
8: டி.ராஜேந்தர், வைகோ, விஜயகாந்த், சரத்குமார் _ இவர்களில் உங்களோடு நெருக்கமாக இருந்து இப்போது தேர்தலில் உங்களை எதிர்ப்பவர்களின் பிளஸ் மற்றும் மைனஸ்களை வரிசைப்படுத்துங்கள். இவர்களில் யாருடைய நடவடிக்கை உங்களுக்குத் திருப்தி தருகிறது?
9: சரத்குமாருக்கும் உங்களுக்கும் அப்படி என்ன தான் பிரச்சினை?
10: தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் ஒன்று சேர, சன் டி.வி. ஒரு காரணமாக இருந்திருக்கிறது. இருக்கிறது. அதைத் தடுக்க நீங்கள் முயலவில்லையா? சன் டி.வி.யைக் கொஞ்சம் அனுசரித்துப் போகச் சொல்லியிருக்கலாமே?
11: சன் டி.வி. என்னுடையது அல்ல. அது ஒரு தனியார் நிறுவனம் என்று சொல்லி நீங்கள் ஒதுங்கினாலும், சன் தொலைக்காட்சியின் ஆதாரப் பள்ளி தி.மு.க. என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருந்தாலும், நீங்கள் அந்த உண்மையை மறைக்க முயல்வது ஏன்?
12: ஒரு ரூபாய்க்கு செய்தித்தாள் வழங்குவது மற்ற செய்தித்தாள்களைப் பாதிக்கும் அல்லவா? இது குறித்து நீங்கள் கலாநிதி மாறனிடம் பேசியிருக்கிறீர்களா?
13: பல நாடுகளில், பல மாநிலங்களில் பல நிறுவனங்கள் இப்படி குறைந்த விலைக்குச் செய்தித் தாள்களை விற்றிருந்தாலும், அவற்றின் பின்னணியில் அரசியல் கட்சியோ அரசியல் தலைவர்களோ இருந்ததில்லை. மீடியா முழுவதும் ஒருவரின் பிடியிலே இருப்பது நல்லதா?
14: ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்து வைகோவை அணி மாறாமல் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறதா?
15: வைகோவின் பிரச்சாரம் தி.மு.க. வைப் பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா?
16: உங்கள் கூட்டணி பலமாக இருந்தாலும், நீங்கள் ஒருவர்தான் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கிறீர்கள். ஆனால் அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவைத் தவிர வைகோ, திருமாவளவன், நெல்லை கண்ணன், என்று திறம்பட பேசக் கூடியவர்கள் இருக்கிறார்கள். எப்படி அவர்களை எதிர்கொள்ள போகிறீர்கள்?
17: ம.தி.மு.க. எம்.பி.களைக் காட்டித் தான் நீங்கள் கூடுதல் மத்திய மந்திரி பதவிகளை வாங்கியதாக வைகோ குற்றம் சாட்டுவதற்கு உங்கள் பதில் என்ன?
18: தி.மு.க. தேர்தல் செலவுகளுக்காக தி.மு.க. வின் மத்திய மந்திரிகள் டெல்லியில் தொழிலதிபர்களை பணம் கேட்டு மிரட்டுவதாக, ‘‘டைம்ஸ் ஆப் இந்தியா’’வில் செய்தி வந்துள்ளது. வைகோவும் இதை மேடைகளில் பேசுகிறார். இதற்கு தி.மு.க. தரப்பிலிருந்து வலுவான எதிர்ப்பு வராதது ஏன்?
19: மற்ற கட்சிகளில் புதுமுகங்கள் வருமளவுக்கு தி.மு.க.வில் புதுமுகம் குறைவாகக் காணப்படுவதற்கு என்ன காரணம்? உதாரணமாக தி.மு.க. வில் கட்சித் தலைவர்களின் வாரிசுகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறதே?
20: இலவச சைக்கிள் திட்டமும், மழைக்காக ஜெயலலிதா வழங்கிய 2000 ரூபாயும் தி.மு.க.வின் வெற்றியைப் பாதிக்குமா?
21:‘‘சீட்’’ கிடைக்காத ஒரே காரணத்திற்காக அணி மாறும் அரசியல் தலைவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

5 Comments:

Blogger aathirai said...

sozha nadan,
idhe padhivai poduvadharkaaga vandhu ukkaarnthen. enakku velai michamanadhu. nandri.

Mar May 02, 07:31:00 PM GMT-4  
Blogger Muthu said...

ஆதிரை,
வருகைக்கு நன்றி.
நான் கடந்த பல வாரங்களாகவே குமுதத்தில் வரும் செவ்விகளை படித்து வருகிறேன். இன்று கலைஞரிடம் கேட்கப்பட்ட கேள்விகளைப் பார்க்கும்போது அவர்களின் நடுநிலை முகத்திலைறைகிறது. எனவே தான் இதை பகிர்ந்து கொள்ளாமலிருக்க முடியவில்லை. முக்கியமாக முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசிரியர் பாடிய துதியின் வீச்சம் தாங்க முடியவில்லை.

பொது எதிரியை ஒழிக்க அனைத்து செய்தி ஊடகங்களும் தங்கள் நிலைகளை வெளிப்படையாகவே எடுத்து விட்டன. இதுவரை போட்டிருந்த நடுநிலை சாயம் வெளுப்பதைக்கூட கவனிக்கும் நிலையில் இல்லை. வர்த்தக போட்டியின் வேகத்தில் எதையும் செய்ய துணியும் இவர்கள் இன்றைய அரசியல்வியாதிகளை எதிர்த்து முனகக்கூட அருகதை இல்லாதவர்கள். தேர்தல் முடிந்ததும் பழைய புனித பசு முகமூடியை தூசு தட்டி எடுக்கும் போது காறி உமிழவேண்டும்.

Mar May 02, 07:50:00 PM GMT-4  
Blogger மாயவரத்தான் said...

கருணாநிதியிடம் கேட்ட கேள்விகளில் ஹைலைட் பண்ணியதை நீங்கள் சிவப்பு நிறத்துக்கு பதிலாக மஞ்சள் நிறத்தில் போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் :)

Mar May 02, 08:45:00 PM GMT-4  
Blogger Muthu said...

மாயவரத்தான்,
முன்பே முயற்சி செய்தேன். ஆனால் bgcolorஉம் மஞ்சளை ஒத்திருப்பதால் எழுத்துக்களை படிக்க வெகு கடினமாக இருக்கிறது :-(. விருப்பத்தை நிறைவேற்ற முடியாமைக்கு மன்னிக்கவும்

Mar May 02, 10:17:00 PM GMT-4  
Blogger Machi said...

அடிமடியிலேயே ( குமுதம் விற்பனையில்) அடி விழுந்தப்புறம் நடு நிலையாவது கிடு நிலையாவது. என்ன குங்குமத்தால எதிர்ப்பின் வேகம் அதிகமாகிடுச்சு, அவ்வளவுதான்.

Mar May 02, 10:34:00 PM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home